14 டிசம்பர், 2011

ஈரோடு சங்கமம் - 2011

ஈரோடு வலைப்பதிவு நண்பர்கள் நடத்தும் சங்கமம் விழா இவ்வருடமும், 18 திசம்பர் 2011 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கிறது.



நிகழ்வு 18.12.2011 ஞாயிறன்று, ஈரோடு, பெருந்துறை சாலை, பழையபாளையத்தில் உள்ள ரோட்டரி CD அரங்கில், மிகச்சரியாக காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் இரண்டு மணிக்கு நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்வில் மிக வித்தியாசமான அங்கீகாரங்கள், மிகச்சிறந்த ஆளுமைகளின் சிறப்புரை, அர்த்தமிகு கலந்துரையாடல், மதிய விருந்து என பிரம்மாண்டமாய் நிகழவிருக்கிறது.


அனைவரும் வருமாறு அன்போடு அழைக்கிறோம்.

28 செப்டம்பர், 2011

எஸ்.ரா., தாகூர் விருது பெற்றமைக்கு பாராட்டு விழா!!!!

மகாகவி தாகூரின் 150வது ஆண்டினை ஒட்டி இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய விருது (Tagore Literature Award) ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது.

91 ஆயிரம் ரொக்கப்பணமும், தாகூர் உருவச்சிலையும், பாராட்டுப் பத்திரமும் கொண்டது இவ்விருது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் எட்டு தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள மிகச்சிறந்த இலக்கியவாதியின் ஒரு நூலிற்கு தாகூர் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கான தேர்வுப் பணியை மேற்கொள்வது டெல்லியில் உள்ள சாகித்ய அகாதமி நிறுவனம், இந்த ஆண்டு இந்திய அளவில் எட்டு இலக்கியவாதிகள் இவ்விருதினைப் பெறுகிறார்கள்.

2010ம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய யாமம் நாவலுக்கு வழங்கப்படுகிறது.

யாமம் நாவல் சென்னையின் முந்நூறு ஆண்டுகாலச் சரித்திரத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நவீன நாவல், இந்த நாவல் முன்னதாக தமிழின் சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்டு கனடாவின் இயல்விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பெருமைக்குரிய இந்திய விருதான தாகூர் இலக்கிய விருது தமிழுக்கு முதன்முறையாக எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது.

அவ்விருது பெற்றமைக்கு சேர்தளம்-திருப்பூர் வலைப்பதிவர் குழுமம்  சார்பில் பாராட்டு விழாவும், வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடலும் திருப்பூரில் 25 செப்டம்பர் 2011 அன்று நடந்தது.


ஓவியர் திரு. வீரப்பன் ஐயா, தானே வரைந்த ஓவியத்தை எஸ்.ராவுக்கு பரிசளித்தார்.

நிகழ்ச்சி குறித்த தினமணி நாளிதழ்ச் செய்தி!



27 செப்டம்பர், 2011

எஸ்.ராவுடன் கலந்துரையாடல்

திருப்பூரில் 25 செப்டம்பர் 2011 ஞாயிற்றுக் கிழமை சேர்தளம் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணனுடனான கலந்துரையாடல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அது குறித்த ”தினமலர்” செய்தி!


நன்றி - தினமலர், திருப்பூர்.

23 செப்டம்பர், 2011

அன்போடு அழைக்கிறோம்!

திருப்பூர் சேர்தளம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வுக்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.


- திருப்பூர் வலைப்பதிவர் குழும நண்பர்கள், திருப்பூர்.


2 ஜூன், 2011

திருப்பூர் ராம்ராஜ்


சல்யூட் ராம்ராஜுக்கு சல்யூட்


Tuesday, May 31, 2011

வாரத்தின் முதல் நாள் கோவிலுக்கு சென்று கடவுளை வேண்டிக் கொண்டு பணிக்கு செல்லுவது வழக்கம், அது போலவே நேற்று காலையில் கோவிலுக்கு சென்றேன், அங்கு ஒரு பெரியவர் தீவிரமாக வழிபாடு செய்து கொண்டிருந்தார், நான் செல்வதற்கு முன்பிருந்தே அங்கு நின்று வழிபட்டு கொண்டிருந்தார்.

நானும் கடவுளை வேண்டிக் கொண்டு கோவிலை சுத்தி வந்து கொண்டிருந்தேன், அவரது மகன் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என வேண்டிக் கொண்டிருந்தார், அடுத்தடுத்த சுற்றுகளில் சுற்றி வரும் போது இன்னும் இரண்டு பேர்களின் பெயரையும் வேண்டுதலின் போது சொல்லிக் கொண்டிருந்தார், சரி! அவரின் அடுத்த இரண்டு மகன்கள் போலும் என எண்ணிக் கொண்டு, என்னுடைய வழிபாடு முடிந்ததும், வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்

அப்பொழுது அந்தப் பெரியவர், தம்பி பஸ் ஸ்டாண்டு வழியா போவீங்களா? போனீங்கன்னா என்னை அங்க இறக்கி விடுறீங்களான்னு கேட்டார், சரி ஏறிக்குங்கன்னு சொல்லி அவரை ஏற்றிக் கொண்டேன், போகும் வழியெங்கும் உள்ள கோவில்களை பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டே முன்பு சொன்னது போலவே அவரது மகன் இன்னும் இரண்டு பேர்களின் பெயரை முணுமுணுத்து வேண்டிக் கொண்டே வந்தார்.

எனக்கு ஆர்வம் தாளாமல், என்ன விசயம் சார், ரொம்ப தீவிரமா வேண்டிக்கிட்டு இருந்தீங்கன்னு கேட்டேன், அதுக்கு அவர், ஒண்ணுமில்லீங்க தம்பி! என்னோட பையன் கம்ப்யூட்டர் இஞ்ஜினியரிங் படிக்கறான், கடைசி வருசம், நல்ல மார்க் எடுக்கணும்னு வேண்டிக்கிட்டேன்னு சொன்னார், அப்படிங்களா சார், உங்களுக்கு மொத்தம் மூணு பசங்களான்னு கேட்டேன், இல்லீங்க தம்பி ஒரு பையன்தான் அவன் தான் படிக்கறான்னு சொன்னார்.

அப்படிங்களா, இல்லை மூணு பேர் பேரைச் சொல்லி வேண்டிகிட்டு இருந்தீங்களே, அதனால கேட்டேன்னு சொன்னேன், அதுங்களா அவங்க ராம்ராஜ் கம்பெனி முதலாளியும், அவரோட உதவியாளரும்னு சொன்னாரு, அவங்கதான் என் பையன படிக்க வைக்குறாங்கன்னு சொன்னார்.
அதிக மார்க் எடுத்துட்டு வசதி இல்லாம இருக்குற ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவங்களுக்கு அவங்க விருப்பப்பட்ட படிப்பு படிக்க உதவி செஞ்சுட்டு இருக்குறார்னு சொன்னாரு, எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது, இத்தனை நாள் திருப்பூர்ல இருக்கேன் எனக்கே தெரியாம போச்சேன்னு இருந்தது

ஓ, அப்படிங்களா, கொஞ்சம் விபரமாச் சொல்ல முடியுங்களா? எனக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தா சொல்ல வசதியா இருக்கும்னு கேட்டேன், அவரு சொன்ன விபரங்கள் கீழே,


திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு அருகிலுள்ள சென்னை சில்க்ஸ் போற வழிக்கு பின்னாடி சத்குரு டிரஸ்டுன்னு ஒண்ணு வச்சு நடத்திக்கிட்டு இருக்காரு, திருப்பூர் ராம்ராஜ் நிறுவனத்தின் திரு. கதிர்வேல் அவர்கள், அவர் கூட திருப்பூரின் பெரிய நிறுவனங்களின் முதலாளிகளும் துணையாக இருக்காங்க.

நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கி படிக்க முடியாம இருக்குற ஏழை மாணவர்கள் அவங்களை அணுகினால், அவங்க படிச்சு முடிக்கற வரைக்கும், அவங்களோட கல்லூரி, உணவு, விடுதிக் கட்டணம் எல்லாத்தையும் கட்டி அவங்கள படிக்க வைக்குறாங்க.

இதுக்காக அவங்க உள்ளூர்க்காரங்க, வெளியூர்க்காரங்கன்னு பாகுபாடு பார்க்குறது கிடையாது. வெளியூர்லருந்து வந்தும் உதவி பெற்று போகிறார்கள், எனக்குத் தெரிஞ்சு அம்பது பசங்களுக்கு மேல படிக்க வச்சுகிட்டு இருக்காருனு சொன்னார்.

நல்லாப் படிக்கற யாருக்காவது உதவி வேண்டுமென்றால், திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து, மங்கலம் போகும் பேருந்தில் ஏறி, பழக்குடோன் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ராம்ராஜ் ஹெட் ஆபீஸ் எங்கன்னு கேட்டா எல்லாரும் வழி சொல்லுவாங்க, ஈசியா கண்டுபுடிச்சிடலாம், அங்க போய் திரு.கதிர்வேல் அவர்களின் பி.ஏ திரு.ஜீவானந்தம், அவரைப் பார்த்து விசயத்த சொல்லி உதவி கேட்டா ரெண்டு நாள்ல கண்டிப்பாக உதவி பண்ணுவாரு.

மறக்காம மார்க் சீட்டு கொண்டு போறது முக்கியம். ஏழை மாணவர்களா இருக்குறதும் ரொம்ப முக்கியம், என்னோட பையனுக்கு ரெண்டே நாள்ல டிடி எடுத்துக் கொடுத்து ஹெல்ப் பண்ணுனாங்க, இதுவரைக்கும் ரெண்டு லட்சம் ரூபா அளவுக்கு ஹெல்ப் பண்ணி இருக்காங்க, நான் கம்பெனில வேலை பார்த்தெல்லாம் இன்ஜினியரிங் படிக்க வைக்க முடியுங்களா, என்னோட பையனுக்கு அவருதான் காசு கட்டி படிக்க வைக்குறாருன்னு சொன்னாரு, உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தா கண்டிப்பா சொல்லுங்கன்னு சொன்னாரு.
சரிங்க கண்டிப்பா சொல்லுறேன், அப்படியே அவரோட போன் நம்பர் சொன்னீங்கன்னா கொஞ்சம் ஈசியா இருக்கும்னு சொன்னேன், இல்ல தம்பி அவரோட அனுமதி இல்லாம போன் நம்பர் கொடுக்கறது அவ்வளவு உசிதமா இருக்காது, அதுவுமில்லாம நேர்ல போய் கேட்குற மாதிரி போன்ல பேசுறது இருக்காது, நமக்கு உதவி வேணும்னா நாமதான் நேர்ல போய் கேட்கணும், இங்க பக்கத்துலதான இருக்கு, நேர்லயே போய்ப் பார்க்கச் சொல்லுங்க தம்பின்னு சொல்லிட்டாரு.

எனக்குத் தெரிஞ்சவங்க யாரும் இப்ப படிக்கறவங்க இல்லை, அதனால அவரு சொன்னதை பிளாக்குல பகிர்ந்துக்கணும்னு தோணுச்சு, யாராவது வசதி இல்லாதவங்க கல்வி உதவி தேவைப்படுறவங்க இருந்தா திருப்பூர் ராம்ராஜ் நிறுவனத்த அணுகலாம், எனக்கு இந்த விசயம் புதுசா இருக்குறதால இதோட நம்பகத்தன்மை எந்தளவுக்குன்னு தெரியல, திருப்பூர்ல இருக்குற விசயம் தெரிஞ்ச நண்பர்கள் சொல்லலாம், அவங்களோட போன் நம்பர் கிடைக்குமானு முயற்சிக்கிறேன். கிடைச்சா கண்டிப்பா பிளாக்குல போடறேன், 

ஏழை மாணவர்களின் கல்விக் கண் திறக்க இந்த மாதிரி சத்தமில்லாம உதவி பண்ணிட்டு இருக்கறவங்களையும் ஊக்குவிக்கிறது ரொம்ப முக்கியம், அதனால ஏழைக் குழந்தைகளோட கல்விக்கு உதவி பண்ணிட்டு இருக்குற ராம்ராஜ் நிறுவனத்தின் முதலாளி அவர்களுக்கும், திரு. கதிர்வேல், திரு. ஜீவானந்தம், மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக உள்ள அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

நண்பர்களே! இது போல உங்கள் ஊரிலயும் உதவி செய்யுற பெரியவங்க யாராச்சும் இருப்பாங்க, அவங்கள நீங்களும் அறிமுகம் செஞ்சீங்கன்னா உதவி தேவைப்படுறவங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும், நன்றி

அன்புடன்
இரவுவானம்.

நண்பர் இரவு வானம் எழுதிய பதிவு பலரைச் சென்றடைய வேண்டுமென்பதற்காக அவருடைய அனுமதியுடன் இங்கும் பதியப்பட்டிருக்கிறது.

5 ஏப்ரல், 2011

தவற விடாதீர்கள்....

உங்கள் தொகுதியில் நிற்கும், வேட்பாளருக்கு வாக்களியுங்கள் அல்லது யாருக்கும் ஓட்டளிக்கப் பிடிக்கவில்லையென்றால் இருக்கவே இருக்கிறது 49 ‘ஓ’.  ஐந்து வருடங்களுக்கொரு முறை உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பைத் தவற விடாதீர்கள்.  ஓட்டளியுங்கள்.


16 மார்ச், 2011

வண்ணமிழந்த வளநகர்

கவிஞர். மகுடேசுவரன் திருப்பூரின் சாய ஆலை மூடல் பிரச்சனை குறித்து எழுதியது.
நேற்று அலைபேசிய சுதாகர், ‘என்னடா மாப்பிள்ள… ஒரு வீட்டுக் கடன் இருக்கு. ஒரு வாகனக் கடன் இருக்கு. மாட்டிக்கிட்டேன் போலிருக்கே…’ என்றான். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
இன்று காலையில் என் வீட்டு அழைப்பு மணியை அழுத்திய இளைஞர்கள் இருவர் ‘டையிங்ல வேலை இல்லேன்னுட்டாங்க… ஏதாவது சில்லறை வேலை இருந்தா கொடுங்க… செய்றோங்க…’ என்று கேட்டார்கள். வாரந்தோறும் வீட்டுக்குப் பணவஞ்சல் அனுப்பிய அவர்கள் ஒரே வாரத்தில் பிச்சைக்காரர்களைப் போலாகி நின்றது என் நெஞ்சை அரித்தது. தமிழ்நாட்டில் ஊருக்கு நூறுபேர் திருப்பூர் போடும் சோற்றைத்தான் உண்ணுகிறார்கள் என்கிற பேருண்மையை நாம் பெருந்தகைமை கொண்டு பார்க்க வேண்டும். பேருந்தை விட்டிறங்கியதும் உங்களை வேலைக்கு அழைத்துக்கொள்ளும் ஒரே நகரமல்லவா இது ?
முழுவதும் படிக்க...... http://tamilini.in/?p=78

நிறமிழக்கும் பின்னல் நகரம்

திருப்பூரைப் பற்றி மணல் கடிகை என்ற நாவல் எழுதிய எம். கோபாலகிருஷ்ணன் தற்போதைய திருப்பூரின் நிலை குறித்து எழுதியது.

இன்றைய திருப்பூரில் உள்ள தொழிலாளிகளில் 60 சதத்துக்கும் மேற்பட்டோர் மாநிலத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். 8 சதவீதம் பேர் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இராமநாதபுரம், தேனி, மதுரை, தூத்துக்குடி, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், திருச்சி என்று தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தொழிலாளர்கள் இங்கு இடம் பெயர்ந்துள்ளனர். வாரச் சம்பளத்தை நம்பி உள்ள இவர்கள் அனைவரும் அதிகபட்சம் ஒரு மாத காலம் வேலையின்றித் தாக்குப் பிடிக்க முடியும். அதன் பிறகு அவர்களுக்கு சொந்த ஊருக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியிருக்காது.

தீர்ப்பு வெளியான நாளிலிருந்து இன்று வரை சுமார் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத ஒவ்வொரு நாளும் அந்நியச் செலாவணி இழப்பு கோடிக்கணக்கில் ஏற்படுவது உறுதி. அதைவிட, தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் மறைந்து கொண்டிருப்பது வேதனையானது. திருப்பூர் தனது தொழில் வளர்ச்சியை இழந்துவிடுமா?
முழுவதும் படிக்க...... http://tamilini.in/?p=76
 

28 ஜனவரி, 2011

திருப்பூர் புத்தகக் கண்காட்சி

திருப்பூரில் கடந்த எட்டு வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி 28ம் தேதியிலிருந்து தொடங்குகிறது.




அனைவரும் வாருங்கள்!